நாமக்கல்லில் கோர விபத்து: மேல்நிலை குடிநீர் தொட்டி விழுந்து 2 பேர் பலி

குடிநீர் தொட்டியின் தூணில் வாகனம் மோதியதில், தொட்டி சரிந்து விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்லில் கோர விபத்து: மேல்நிலை குடிநீர் தொட்டி விழுந்து 2 பேர் பலி
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே சரக்கு வாகனம் மேல்நிலை குடிநீர் தொட்டியின் தூணில் மோதியதில், தொட்டி வாகனத்தின் மீது சரிந்து விழுந்து டிரைவர் மற்றும் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடிநீர் தொட்டியில் மோதியது

திருச்செங்கோடு தாலுகா வையப்பமலையில் இருந்து முட்டைகள் ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை நோக்கி நேற்று மாலை சரக்கு வாகனம் ஒன்று புறப்பட்டது. அந்த வாகனத்தை திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (23) ஓட்டிச் சென்றார். அவருடன் மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த சரக்கு ஏற்றி இறக்கும் தொழிலாளி குமார் (29) பயணம் செய்தார்.

மல்லசமுத்திரம் அருகே மேட்டுப்பாளையம் சத்யாநகர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மேல்நிலை குடிநீர் தொட்டியின் தூண்களில் பலத்த வேகத்தில் மோதியது.

2 பேர் பலி

இதன் தாக்கத்தில் குடிநீர் தொட்டியின் தூண்கள் முறிந்து, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி முழுவதுமாக சரக்கு வாகனத்தின் மீது சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் டிரைவர் சுபாஷ் மற்றும் தொழிலாளி குமார் ஆகியோர் வாகனத்துக்குள் சிக்கி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புப் பணியினர், ராட்சத குடிநீர் தொட்டி வாகனத்தின் மீது விழுந்திருந்ததால் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டதையடுத்து இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com