சேலம் அருகே கோர விபத்து: லாரி-சரக்கு வாகனம் மோதல்; டிரைவர் பலி - 20 பேர் படுகாயம்

மோதிய வேகத்தில் சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ்சின் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.
சேலம் அருகே கோர விபத்து: லாரி-சரக்கு வாகனம் மோதல்; டிரைவர் பலி - 20 பேர் படுகாயம்
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே நேற்று இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி டிரைவர் உயிரிழந்தார். மேலும், அரசு பஸ்சில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து எப்படி நடந்தது?

மேட்டூரில் இருந்து அரசு பஸ் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் மேச்சேரி அருகே உள்ள எம்.காளிப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, பஸ்சின் பின்னால் வந்த சரக்கு வாகனம் அரசு பஸ்சை முந்திச் செல்ல முயன்றது. அந்த நேரத்தில் எதிரே வந்த லாரியுடன் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ்சின் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.

20-க்கும் மேற்பட்டோர் காயம்

இந்த விபத்தில் லாரி, சரக்கு வாகனம் மற்றும் அரசு பஸ் ஆகியவை கடுமையாக சேதமடைந்தன. லாரி டிரைவர், கிளீனர், சரக்கு வாகன டிரைவர் மற்றும் அரசு பஸ்சில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

மீட்புப் பணியில் போலீசார்

விபத்து குறித்து தகவல் அறிந்த மேச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் தனியார் ஆம்புலன்ஸ்கள் மூலம் மேச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

டிரைவர் உயிரிழப்பு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாரி டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

இந்த விபத்தால் மேச்சேரி-மேட்டூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் சேதமடைந்த வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து தொடர்பாக மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com