

சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டும் என்று த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்திய திருநாவுக்கரசு உள்பட 8 பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த குதிரைபேர விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும், அவரது தம்பி அசோக்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி இருவருக்கும் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினர்.
இதையடுத்து இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அசோக்குமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனு எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் ஐகோர்ட்டு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு வரவுள்ளது.
இந்தநிலையில், இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு செந்தில்பாலாஜியும் நேற்று மனு தாக்கல் செய்தார். அதில், "ஆளும் கட்சி எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எனக்கு எதிராக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கவேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.