நெல்லையில் விநாயகர் படத்துடன் பிரியாணி விளம்பர பேனர்: ஓட்டல் உரிமையாளர் கைது

திருநெல்வேலி மாவட்டம், வி.எம்.சத்திரத்தில் உள்ள அசைவ ஓட்டல் ஒன்றில், விநாயகர் பிரியாணி சமைப்பது போன்ற படம் விளம்பர பேனரில் இடம்பெற்றதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரித்தனர்.
நெல்லையில் விநாயகர் படத்துடன் பிரியாணி விளம்பர பேனர்.
Published on

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம் வி.எம்.சத்திரத்தில் ஓட்டல் விளம்பர பேனரில் விநாயகர் படத்தை சர்ச்சைக்குரிய வகையில் பயன்படுத்தியதாக பிரியாணி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

விநாயகர் பிரியாணி சமைப்பது போன்ற படம்

திருநெல்வேலி மாவட்டம், வி.எம்.சத்திரத்தில் உள்ள தூத்துக்குடி சாலையில் இயங்கி வரும் அசைவ ஓட்டல் ஒன்றில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சலுகை விலையில் பிரியாணி வழங்கப்படுவதாக விளம்பர பதாகை வைக்கப்பட்டிருந்தது. அதில் விநாயகர் பிரியாணி சமைப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது.

இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு

அந்த படமானது இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக இந்து முன்னணி அமைப்பினர் குற்றம்சாட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உணவகத்தின் முன்பு திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாநகர போலீசார் பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகர போலீசார், பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, சர்ச்சைக்குரிய விளம்பர பதாகையை உடனடியாக அகற்றினர். மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.

இந்துக்களின் கடவுளை அவமதிக்கும் வகையிலும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் உள்நோக்கத்துடன் இந்தப் பதாகை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நரசிங்கநல்லூரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஓட்டல் உரிமையாளர் கைது

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அசைவ உணவகத்தின் உரிமையாளரான கே.டி.சி. நகரைச் சேர்ந்த முருகையா என்பவரின் மகன் ஜெயந்த் (வயது 30) என்பவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com