வீட்டுக்கடன் மோசடி: வங்கி அதிகாரி உள்பட 3 பேருக்கு ஜெயில் சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு

வீட்டுக்கடன் மோசடி வழக்கில் வங்கி அதிகாரி உள்பட 3 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.
வீட்டுக்கடன் மோசடி: வங்கி அதிகாரி உள்பட 3 பேருக்கு ஜெயில் சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு
Published on

சென்னை,

சென்னையில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருபவர் ராம்ஜி. இவரது நிறுவனத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள வீடுகளை வாங்க ஸ்டேட் பாங்க் ஆப் சவுராஷ்டிரா என்ற வங்கியின் சென்னை அண்ணாநகர் கிளை மூலம் கடன் பெற்றுத்தருவதாக கூறி தென்னக ரெயில்வேயில் பணியாற்றி வரும் சண்முகசுந்தரம் என்பவர் ரெயில்வே தொழிலாளர்கள் பலரிடம் கூறி உள்ளார்.

பின்னர், அவர்களிடம் இருந்து சம்பள சான்றிதழ் பெற்று அவர்கள் கூடுதல் சம்பளம் பெறுவது போன்று போலி சான்றிதழ் தயாரித்து 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை ஒவ்வொரு நபருக்கும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வங்கியில் கடன் வாங்கி கொடுத்துள்ளார்.

இதேபோன்று ராம்ஜியும் போலி சான்றிதழ் கொடுத்து 50 நபர்கள் கடன் பெற அனுமதி பெற்று அந்த கடன் தொகையை தனது வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளார். இதற்கு வங்கி மேலாளர் பினாகி பட்டாச்சார்யா உடந்தையாக இருந்துள்ளார். இதன்மூலம் வங்கிக்கு ரூ.2 கோடியே 52 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி ராம்ஜி உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி ஜவகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. தரப்பில் மூத்த அரசு வக்கீல் எம்.வி.தினகர் ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, வங்கி அதிகாரி உள்பட 3 பேருக்கும் தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், அவர்கள் 3 பேருக்கும் சேர்த்து 9 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com