

மயிலாடுதுறை நகரில் கோவில் இடங்களில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும் என்று நகரசபை கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நகரசபை கூட்டம்
மயிலாடுதுறை நகரசபை கூட்டம் அதன் அவை கூடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நகர சபை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் சங்கர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர்.
அதன் விவரம் வருமாறு:
ஜெயந்தி (அ.தி.மு.க.): கே.கே.ஆர். நகரில் உள்ள பூங்காவை சீரமைத்து அழகுபடுத்த வேண்டும். திருவிழந்தூர் நகராட்சி பள்ளி வளாகத்தில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதால் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. வெளிப்புறத்தில் ஷெட் அமைத்துகொடுக்க வேண்டும்.
ரஜினி (தி.மு.க): ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக அதன் அருகே குடியிருப்பவர்களை காலிசெய்ய நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்கிய பிறகு காலிசெய்ய சொல்ல வேண்டும்.
மழைநீர் வடிகால்
ரமேஷ் (தி.மு.க): பூம்புகார் சாலையில் நடுநிலைப்பள்ளி அருகே பாதாளசாக்கடை மேனுவல் உடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும். வள்ளலார்கோவில் குடமுழுக்கு வருகிற செப்டம்பர் 10-ந்தேதி நடக்க உள்ளது. சிறப்பு நிதிஒதுக்கீடு செய்து நகராட்சி பணிகள் செய்ய வேண்டும். துர்க்கை அம்மன்கோவில் செல்லும் சாலையில் மழைநீர் வடிகால் அமைத்து கொடுக்க வேண்டும்.
ரிஷி (தி.மு.க) : திருவிழந்தூர் தோப்புத்தெரு பகுதிகளில் கொள்ளிடம் குடிநீரில் கழிவுநீர் கலந்துவருவதை தடுத்து சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்.
ராஜலட்சுமி (தி.மு.க) : பாசிக்கடைத்தெருவில் மழைநீர் வடிகால் அமைத்துகொடுக்க வேண்டும். திருமஞ்சனவீதி, ஆற்றங்கரைத்தெருசில் சாலை சீரமைத்துகொடுக்க வேண்டும். குப்பைகள் தினந்தோறும் அகற்ற வேண்டும்.
கீதா (தி.மு.க) : பட்டிக்காரன்குட்டையில் மழைநீர் வடிகால் அமைத்துகொடுக்க வேண்டும். எல்.பி.நகர் மேலஉடையார்தெரு பாலம் சேதமடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும். தருமபுரம் ஆலமரத்தடித்தெருவிற்கு சாலை அமைத்துகொடுக்க வேண்டும்.
வீட்டு வரி ரசீது
சரோஜா (அ.தி.மு.க) : கோவில் இடங்களில் குடியிருப்பவர்கள் குடிநீர், பாதாளசாக்கடை இணைப்பு பெறமுடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே கோவில் இடங்களில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும்.
சதீஷ் (அ.தி.மு.க): மாயூரநாதர் வடக்கு வீதியில் உள்ள நூலகத்தின் கதவு, ஜன்னல் சேதமடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
முடிவில் நகரசபை துணைத்தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.