குரூப்-4 தேர்வு முறைகேடு நடந்தது எப்படி...? டிஎன்பிஎஸ்சி விளக்கம்

குரூப்-4 தேர்வு முறைகேடு நடந்தது எப்படி...? என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்து உள்ளது.
குரூப்-4 தேர்வு முறைகேடு நடந்தது எப்படி...? டிஎன்பிஎஸ்சி விளக்கம்
Published on

சென்னை

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற பதவிகள் உள்ளடங்கிய 9,398 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு 1 ந்தேதி குரூப்-4 தேர்வு பல்துறைகளைச் சார்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அலுவலர்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது. 16,29,865 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் நவம்பர் 12 ந்தேதி வெளியிடப்பட்டு 24,260 நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

கடந்த 05.01.2020 அன்று சமூக வலைதளங்களிலும் பிறகு ஊடகங்களிலும் இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரம் மற்றும் கீழக்கரை மையங்களில் பிற மாவட்டங்களிலிருந்து வந்து தேர்வு எழுதியவர்கள் தரவரிசைப்பட்டியலில் முதல் நூறு இடங்களுக்குள் அதிகப்படியாக தேர்வாகியுள்ளதாக செய்தி வெளிவந்தது.

இதையடுத்து தேர்வாணையம் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் 99 தேர்வர்கள் இடைத்தரகர்களின் ஆலோசனையின் பேரில் கீழக்கரை மற்றும் இராமேசுவரம் தேர்வு மையங்களைத் தேர்வு செய்ததாகவும் தேர்வுக்காக மேற்படி தேர்வர்கள் இடைத்தரகர்களிடமிருந்து பெற்ற விடைகளைக் குறித்தவுடன் சில மணி நேரங்களில் மறையக்கூடிய சிறப்பு மையினாலான பேனாவினால் விடைகளைக் குறித்துவிட்டு வந்ததாகவும் தெரிய வருகிறது.

மேலும் சந்தேகத்திற்குரிய இடைத்தரகர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த நபர்களின் துணையுடன் 52 தேர்வர்களின் விடைத்தாள்களில் திருத்தம் செய்து மாற்று விடைகளைக் குறித்து, அதே விடைத்தாள் கட்டுகளில் சேர்த்து வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதில் 39 தேர்வர்கள் முதல் 100 தரவரிசைக்குள் வந்துள்ளனர்.

இத்தேர்வு குறித்து தேர்வாணையம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் தீவிர ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட தேர்வுக்கூடங்கள் மற்றும் கருவூலங்களைத் ஆய்வு செய்தது. தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தேர்வர்களிடம் நேரடி விசாரணை செய்தது. இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் இராமேசுவரம் மையங்களில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 2 மையங்களைத் தவிர வேறு எந்த இடத்திலும் வேறு எந்தவிதமான தவறும் நடைபெறவில்லை.

இதை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தரப்பில் கூறி இருப்பதாவது

தேர்வாணையத்தின் தேர்வுகள் அனைத்தும் விண்ணப்பதாரர்களின் தர வரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன. பொய்யான வாக்குறுதிகளை சொல்லி, தவறான வழியில் வேலை வாங்கி தருவதாக கூறும் இடைத்தரகர்களிடம் விண்ணப்பதாரர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.

என்பன போன்று பல வழிகளில் அறிவுறுத்தியும் இதுபோன்ற தவறுகளில் ஒரு சில தேர்வர்களே ஈடுபட்டிருப்பது தேர்வாணையத்திற்கு வருத்தமளிப்பதாகவும் தேர்வாணையத்தின் மாண்பைக் குலைப்பதாகவும் உள்ளது.

எனவே மேற்படி காரணங்களின் அடிப்படையில் தேர்வாணையம் கீழ்கண்ட முடிவுகளை எடுத்துள்ளது.

1. சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. .

2. தரவரிசைப்பட்டியலில் வந்துள்ள 39 தேர்வர்களுக்கு பதில் தகுதியான வேறு 39 நபர்களைத் தேர்வு செய்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது..

3. சம்பந்தப்பட்ட 99 தேர்வர்கள் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.

4. சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில் தகுதியான தேர்வர்களுக்கு உடனடியாக கலந்தாய்வு நடத்தப்படும்.

5. இனிவரும் காலங்களில் எவ்விதமான தவறுகளும் நிகழாவண்ணம் தேர்வு நடைபெறும் முறையில் தகுந்த சீர்திருத்தங்கள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேர்வாணையத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி நடைபெறுகிறது. எனவே தேர்வர்கள் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை வைத்து நேர்மையான முறையில் தேர்வினை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com