

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இடையில் இருப்பதால், வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, 16 தொகுதிகளில் பதிவான வாக்குகள் 3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
ஒவ்வொரு மையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு துணை ராணுவ படையினர், போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தேர்தல் கமிஷன் சார்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கை தொடர்பான முழு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன் விவரம் வருமாறு: வாக்கு எண்ணிக்கை 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடத்தப்படும். பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 234 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தபால் வாக்குகளை எண்ணுவதற்காக கூடுதலாக 240 அறைகள் ஒதுக்கீடு. ஒவ்வொரு 500 தபால் வாக்குகளுக்கும் ஒரு வாக்கு எண்ணும் மேஜை அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 10,545 பணியாளர்கள் நியமனம், 3,324 மேஜைகள் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒருவர் என மொத்தம் 234 வாக்கு எண்ணும் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.