

உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் தா.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசிதழில் கூறி இருப்பதாவது:-
உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்கள், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள வன்னியர், சீர்மரபினர், இதரபிரிவினர்களில் ஏதேனும் ஒன்றில் தகுதியான நபர் இல்லாத நிலையில் ஏற்படும் காலியிடங்களை இதர பிரிவில் இருந்து சுழற்சி முறையில் நிரப்புவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
அதன்படி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (வன்னியர்) பிரிவில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை காலியிடங்கள் ஏற்பட்டால், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (சீர்மரபினர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (இதர பிரிவு) ஆகிய பிரிவுகளில் காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களை இன சுழற்சி பட்டியலின்படி நிரப்பப்பட வேண்டும்.
அதேபோல், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்-சீர் மரபினருக்கான 7 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை காலியிடங்கள் ஏற்பட்டால், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (வன்னியர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (இதர பிரிவு) ஆகியோருக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்-இதர பிரிவினருக்கான 2.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை காலியிடங்கள் இருந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (வன்னியர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (சீர்மரபினர்) ஆகியோருக்கும் இனசுழற்சி பட்டியல் அடிப்படையில் இடங்கள் வழங்கி காலியிடங்களை நிரப்பலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.