சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது எப்படி? - வழிமுறைகள் வெளியீடு

செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது எப்படி? - வழிமுறைகள் வெளியீடு
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு உரிமம் பெறுவது கட்டாயம் என்ற அறிவிப்பினை தொடர்ந்து, உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இதன்படி பெருநகர சென்னை மாநகராட்சியின் (www.chennaicorporation.gov.in) இணையதளத்திற்குச் சென்று 'இணையதள சேவைகள்'(Online Services) என்பதனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அதில் உள்ள பல சேவைகளில் 'செல்லப்பிராணிகளின் உரிமம்'(Pet Animal License) என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

இதைத் தொடர்ந்து 'புதிய பயனர்'(New User) என்பதை தேர்வு செய்து, அதில் தங்களது விவரங்களை உள்ளீடு செய்து நான்கு இலக்க எண்ணை(Pin Number) உள்ளீடு செய்ய வேண்டும். இதன் பின்னர் பயனாளர் தங்களது அலைபேசி எண்ணையும், நான்கு இலக்க எண்ணையும் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.

பின்னர் 'புதிய செல்லப்பிராணிகளின் உரிமம்'(New Pet Registration) என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில் செல்லப்பிராணிகளின் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, உரிமையாளரின் புகைப்படம், முகவரி, செல்லப்பிராணியின் புகைப்படம், ஒரு வருடத்திற்குள்ளாக வெறிநாய்க்கடி, நோய்த்தடுப்பு ஊசி செலுத்தியதற்கான சான்றின் புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து உறுதிமொழி(Declaration) அளித்த பின்னர் சமர்ப்பிக்க(Submit) வேண்டும்.

இந்த விவரங்களை சம்பந்தப்பட்ட மண்டல கால்நடை உதவி மருத்துவர் அங்கீகரித்த பிறகு, பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு பணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் பின்னர் உரிமையாளர்கள் தங்களது பெருநகர சென்னை மாநகராட்சி இணையதள பக்கத்தில் உள்ள 'இணைய முகப்பு'(Portal) பக்கத்திற்கு சென்று இணைய வழியில் 50 ரூபாய் பணம் செலுத்த வேண்டும்.

அதன் பிறகு 'செல்லப்பிராணிகளின் உரிமம்'(Pet Animal License) பதிவிறக்கம் செய்வதற்கான 'இணைப்பு'(Link) உருவாகும். அதனை கொண்டு பயனாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுக்கான உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com