சிறிய நகரங்களில் மெட்ரோ திட்டத்துக்கு அனுமதித்தது எப்படி? - ரெயில்வே தொழிற்சங்கம் கேள்வி

மெட்ரோ ரெயில் திட்டம் என்பது மக்கள் தொகையை கொண்டு முடிவு செய்யும் திட்டம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
சிறிய நகரங்களில் மெட்ரோ திட்டத்துக்கு அனுமதித்தது எப்படி? - ரெயில்வே தொழிற்சங்கம் கேள்வி
Published on

மதுரை,

வடமாநிலங்களில் 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகையை கொண்ட நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளது எந்த அடிப்படையில் என்று டி.ஆர்.பி.யூ. தொழிற்சங்கம் கேள்வி எழுப்பியது.

மதுரை, கோவை

மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டம் மக்கள் தொகை குறைவாக இருப்பதாக கூறி மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது. அதற்கு பதிலாக பஸ் போக்குவரத்தை மேம்படுத்தவும் அறிவுறுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

அதாவது, திருமங்கலம்-ஒத்தக்கடை இடையே 31 கி.மீ. தூர மெட்ரோ ரெயில் பாதை பணிக்கு ரூ.11,360 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மீண்டும் நிராகரிப்பு

இதற்காக மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான விரிவான ஆய்வறிக்கையை தமிழக அரசின் சென்னை மெட்ரோ ரெயில் கார்ப்பரேசன் நிறுவனம் மத்திய அரசிடம் வழங்கியது. ஆனால் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் தமிழக அரசு இது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்ற மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதற்கிடையே, மீண்டும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் நிராகரித்துள்ளது.

தமிழகத்துக்கு இழைக்கும் அநீதி

இது குறித்து டி.ஆர்.பி.யூ. தொழிற்சங்கத்தின் பொது செயலாளர் சங்கரநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தை மக்கள் தொகையை காரணமாக காட்டி மத்திய அரசு 2-வது முறையாக நிராகரித்துள்ளது. இது தமிழகத்துக்கு இழைக்கும் அநீதி ஆகும். தொழில்நுட்பரீதியாக காரணங்களை சொல்லாமல், 2011-ம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து திட்டத்தை மறுப்பது ஏற்கத்தக்கது இல்லை.

20 லட்சத்துக்கும் குறைவாக..

மதுரையின் தற்போதைய மக்கள் தொகை சுமார் 20 லட்சத்தை தாண்டியுள்ளது. மெட்ரோ திட்டத்தை தொடங்கி முடிக்கும் போது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மெட்ரோ ரெயில் திட்டம் என்பது மக்கள் தொகையை கொண்டு முடிவு செய்யும் திட்டம் இல்லை.

ஒரு நகரின் எதிர்கால கட்டமைப்பு வளர்ச்சி, தொழில்துறை முன்னேற்றம், நகர்ப்புற விரிவாக்கம், மக்கள் தொகை உயர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய அனைத்து அம்சங்களையும் கொண்டது. தென்தமிழகத்தின் நுழைவுவாயிலாக உள்ள மதுரைக்கு மெட்ரோ திட்டம் கட்டாயமாகும்.

கான்பூர், நாக்பூர்

ஆனால், உத்தரபிரதேசத்தின் கான்பூர், மத்திய பிரதேசத்தின் இந்தூர், மகாராஷ்டிராவின் நாக்பூர் மற்றும் ஒடிசாவின் புவனேசுவர் ஆகிய நகரங்களில் 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை உள்ளது. எந்த அடிப்படையில் அங்கு மட்டும் மெட்ரோ திட்டம் அனுமதிக்கப்பட்டது.

அத்துடன் மெட்ரோவுக்கு பதிலாக பி.ஆர்.டி.எஸ். எனப்படும் பஸ் போக்குவரத்து திட்டத்தை பரிந்துரைத்தது. அதற்கான சாலை கட்டமைப்பு வசதிகள் மதுரையில் இல்லை. எனவே மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com