

கடலூர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பக்தர்கள் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே கடந்த மாதம் 20, 21 ஆகிய தேதிகளில், சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பாக திருக்கோவில் நலனில் அக்கறை கொண்ட நபர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. இதன் மூலம் மொத்தம் 19,405 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அவற்றில் 14,098 மனுக்களில் திருக்கோவில் நிர்வாகத்தின் மீது புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில்அந்த மனுக்களில் சொல்லப்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து தகுந்த விளக்கமளிக்க வேண்டும் என சிதம்பரம் கோவில் பொது தீட்சிதர் சபையின் செயலாளருக்கு விசாரணைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.