

சென்னை,
நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன், தாழ்த்தப்பட்டோர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்திட, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன? என்றும், மனிதக் கழிவுகளை மனிதர்களே கையாளும் அவல நிலையினை மாற்ற ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே பதில் அளித்து கூறியதாவது:-
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989-ன்படி தேவையான நடவடிக்கைகளை, மேற்கொள்ள வேண்டியது, மாநில அரசின் பொறுப்பாகும். ஆனாலும், மாநில அரசுக்கு துணையாக அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. மனித கழிவுகளை மனிதர்களே கையாள்வதற்கு எதிரான சட்டம் 2013 ஆண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவர்களின் நிவாரணத்திற்கு அரசு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மனிதக் கழிவுகளை கையாள்வதற்கு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரை பணி அமர்த்தினால், அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனையாக, 6 மாதம் அல்லது அதிகபட்சமாக, 5 வருட சிறைத் தண்டனையோடு அபராத கட்டணமும் செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.