'அழகாக இல்லை' என திட்டிய கணவர் எரித்துக்கொலை.. பெண் அதிர்ச்சி வாக்குமூலம்

தனது கணவர் வேலைக்கு சென்ற இடத்தில் மற்றொரு பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியதாக அவர் தெரிவித்தார்.
'அழகாக இல்லை' என திட்டிய கணவர் எரித்துக்கொலை.. பெண் அதிர்ச்சி வாக்குமூலம்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 47), கூலித்தொழிலாளியான இவருடைய மனைவி கவிதா (44). கடந்த 9-ந் தேதி இரவு 11 மணியளவில் வீட்டின் மேல் மாடியில் இருந்த ரங்கசாமியை அவருடைய மனைவி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் படுகாயம் அடைந்த ரங்கசாமி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 11-ந் தேதி இறந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்கசாமியின் மனைவி கவிதாவை தேடி வந்தனர்.

இந்தநிலையில், திருப்பதியில் பதுங்கி இருந்த அவரை நேற்று கைது செய்தனர். கைதான கவிதா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், "எனக்கு திருமணமாகி 22 ஆண்டுகள் ஆகிறது. நாங்கள் கறவை மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறோம். எங்களுக்கு வைத்தீஸ்வரி, சாதிகா என்ற மகள்களும், சூர்யா என்ற மகனும் உள்ளனர்.

வைத்தீஸ்வரிக்கு திருமணம் ஆகி கணவர் வீட்டில் உள்ளார். சாதிகா கிருஷ்ணகிரியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். நாங்கள் சொத்து, பணம், நகைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் வேலைக்கு சென்ற இடத்தில் காரிமங்கலத்தை சேர்ந்த மஞ்சுளாவுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த நான் எனது கணவரை கண்டித்தேன்.

ஆனாலும் அவர் மஞ்சுளாவுடன் பழகுவதை நிறுத்தவில்லை. மேலும் வீட்டில் இருந்த 80 பவுன் நகைகளை கொஞ்சம், கொஞ்சமாக மஞ்சுளாவிற்கு கொடுத்தார். மேலும் நிலத்தை விற்று அவரிடம் கொடுத்தார். சொந்த வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்த நாங்கள் தற்போது வாடகை வீட்டில் வசிக்கிறோம்.

ஒரு கட்டத்தில் எனது கணவர் வீட்டிற்கும் ஒழுங்காக வருவதில்லை. 3 மாதத்திற்கு ஒரு முறை வருவார். அப்போதும் மது குடித்துவிட்டு தான் வருவார். என்னிடம் ஆபாசமாக பேசுவதுடன், நீ அழகாக இல்லை, அசிங்கமாக இருக்கிறாய் என்றெல்லாம் கூறி என்னை அடித்து துன்புறுத்துவார். எனது பிள்ளைகளுக்காக நான் அனைத்தையும் பொறுத்து கொண்டேன்.

இந்த நிலையில் 9-ந் தேதி இரவும் குடித்துவிட்டு வீட்டிற்கு மாடிக்கு சென்ற அவர் என்னை அடித்து உதைத்தார். பின்னர் அவர் போதையில் தூங்கி விட்டார். கோபத்தில் இருந்த நான் விவசாய நிலத்தில் மருந்துக்கு தெளிக்க வைத்திருந்த பெட்ரோலை எடுத்து அவர் மீது போர்வையை போட்டு அதன் மீது பெட்ரோலை ஊற்றி கட்டையில் துணியை சுற்றி பந்தம் போல செய்தேன். பின்னர் அந்த பந்தத்தில் தீயை கொளுத்தி பெட்ஷீட்டிற்கு தீ வைத்து விட்டு தப்பிஓடி தலைமறைவான என்னை போலீசார் மடக்கி பிடித்து விட்டனர்" என்று அவர் தெரிவித்தார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com