

வேலூர்,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணியாற்றி வந்த தாமரைச்செல்வி (40), அவரது கணவர் கத்தியால் குத்தியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தம் அடுத்த ஏர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் (45), ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தாமரைச்செல்வி, குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
தாமரைச்செல்விக்கும், அவரது கணவர் அரவிந்தனுக்கும் கடந்த சில நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (13-ம் தேதி) இரவு பணி முடித்து வீட்டிற்கு திரும்பிய தாமரைச்செல்வியிடம், நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் அவரது கணவர் அரவிந்தன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அரவிந்தன், தாமரைச்செல்வியை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த தாமரைச்செல்வி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி தாமரைச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தாமரைச்செல்வியின் கணவர் அரவிந்தனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.