

தங்கைக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், மனவேதனை அடைந்த புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த தெற்கு பால்பண்ணைச்சேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நெடுஞ்செழியன். இவரது மகன் கஜேந்திரன் (26 வயது) டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த நான்கரை மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கஜேந்திரனின் தங்கைக்கு நேற்று திருமணம் நடக்க இருந்தது.
சம்பவத்தன்று இரவு கஜேந்திரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் மனவேதனை அடைந்த கஜேந்திரன் வீட்டில் இருந்த அறைக்குள் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
அதன்பின்னர் மறுநாள் காலையில் அவரது மனைவி சென்று பார்த்தபோது கஜேந்திரன் துப்பட்டாவால் தூக்கில் தொங்கியபடி இறந்தநிலையில் கிடந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.