மனதை தேற்றி கொள்கிறேன்; ஏன் என்றால் இனி நீ கடவுளின் குழந்தை சுஜித்! அமைச்சர் விஜயபாஸ்கர்

மனதை தேற்றி கொள்கிறேன்; ஏன் என்றால் இனி நீ கடவுளின் குழந்தை சுஜித்! என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மனதை தேற்றி கொள்கிறேன்; ஏன் என்றால் இனி நீ கடவுளின் குழந்தை சுஜித்! அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on

திருச்சி,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த, நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், மூடப்படாத ஆழ்துளை கிணற்றில், 2 வயது ஆண் குழந்தை சுஜீத் வில்சன், கடந்த 25 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் தவறி விழுந்தான்.

இந்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக அயராத முயற்சியில் ஈடுபட்டனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் அங்கு முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்பார்வை செய்தனர். 80 மணி நேரங்களுக்கும் மேலாக மீட்பு பணி நடைபெற்ற நிலையில், இன்று (அக்.,29) அதிகாலை, சுஜித் சடலமாக மீட்கப்பட்டான். சுஜித் நலமுடன் மீட்கப்படுவான் என்று அவரது குடும்பத்தினர் உள்பட தமிழக மக்கள் எதிர்பார்த்த நிலையில், சுஜித் இறந்த நிலையில் மீட்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பிரேத பரிசோதனைக்கு பின் சுஜித்தின் உடலுக்கு கிறிஸ்தவ முறைப்படி இறுதி சடங்குகள் நடைபெற்றது. கல்லறை தோட்டத்தில், வைக்கப்பட்ட சுஜித்தின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலிக்கு பிறகு, சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் சுஜித்தின் உயிரிழந்தது குறித்து மிகவும் உருக்கமாக கூறியிருப்பதாவது:- மனதை தேற்றி கொள்கிறேன்; ஏன் என்றால் இனி நீ கடவுளின் குழந்தை சுஜித்! கருவறை இருட்டு போல் இருப்பாய் என நினைத்தோம்; கல்லறை இருட்டாய் மாறுமென எண்ணவில்லை . 85 அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சுச்சத்தம் தான் மீட்பு பணியில் தந்தை ஸ்தானத்தில் இயங்க வைத்தது. நான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுஜித் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது!

மருத்துவமனையில் வைத்து உச்சபட்ச மருத்துவம் வழங்க நினைத்து காத்திருந்தேன். எப்படியும் வந்துவிடுவாய் என்றுதான் ஊனின்றி உறக்கமின்றி இரவு பகலாய் இமை மூடாமல் உழைத்தோம். இப்படி எம்மை புலம்பி அழவிடுவாய் என்று எண்ணவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com