'உங்களை போலவே நானும் கலங்குகிறேன்' - ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்...!

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (வயது 95) தேனி பெரியகுளத்தில் காலமானார்.
'உங்களை போலவே நானும் கலங்குகிறேன்' - ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்...!
Published on

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (வயது 95). இவருக்கு முதுமை காரணமாக உடல் நலக்குறைபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 22-ந் தேதி அவர் தேனி நட்டாத்தி நாடார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

அவரை கடந்த இரு நாட்களுக்கு முன்னர் ஓ.பன்னீர்செல்வம் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தார். தாயாரின் உடல் நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை வந்தார். இந்நிலையில் பழனியம்மாள் நாச்சியார் உடல்நிலை கவலைக்கிடமானது. அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. முதுமை காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு அவருடைய உடல் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அவரை வீட்டுக்கு கொண்டு செல்ல அவருடைய குடும்பத்தினர் முடிவு செய்தனர். செயற்கை சுவாசம் பொருத்தப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் தெற்கு அக்ரகாரம் தெருவில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் பழனியம்மாள் நாச்சியாரின் உயிர் பிரிந்தது. தாயார் மறைவு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

உங்களைப் போலவே

நானும் கலங்குகிறேன்

மூத்து முதிர்ந்து

உதிர்ந்தாலும்

தாய் தாய்தானே

ஒரு முதலமைச்சரைப்

பெற்றுக்கொடுத்தோம் என்ற

பெருமாட்டியின் பெருமை

மறைவதில்லை

என் பரிவும் இரங்கலும் பன்னீர்செல்வம் அவர்களே

எல்லாத்

துன்பங்களிலிருந்தும்

காலம் உங்களை

மீட்டெடுப்பதாகுக

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com