'இந்திய அரசின் துப்பாக்கிகள் தூக்கம் கலையவேண்டும்' - கவிஞர் வைரமுத்து

காஷ்மீர் படுகொலையை கனத்த வார்த்தைகளால் கண்டிப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 26 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கு பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது கண்டனத்தையும் குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'காஷ்மீர்ப் படுகொலையைக் கனத்த வார்த்தைகளால் கண்டிக்கிறேன். காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் உறைய வேண்டியவை பனிக்கட்டிகள்தாம், இரத்தக் கட்டிகள் அல்ல. தீவிரவாதம் என்பது கோழைகளின் போர்முறையாகும், பூக்களின்மீது தொடுக்கப்படும் வன்முறையாகும்.
புலிகளின்மீது சினம்கொண்டு கிளிகளைக் கொல்வது நியாயத்தைக் காயப்படுத்தாதா?. எந்தவொரு கோரிக்கையும் உடல்களின்மீது இரத்தத்தால் எழுதப்படுவதல்ல.
இந்திய அரசின் துப்பாக்கிகள் தூக்கம் கலையவேண்டும். இனி இது நடக்காதபடி அடக்க வேண்டும். 28 இருதயங்கள் தங்கள் துடிப்பை நிறுத்திய இடத்தில் துடிக்கின்றன இந்தியாவின் இருதயங்கள். ஆழ்ந்த இரங்கல்' என்று தெரிவித்திருக்கிறார்.






