

புதுடெல்லி,
வங்காள தேசத்தில் 2024-ம் ஆண்டு வெடித்த மாணவர் புரட்சி காரணமாக, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன்பிறகு அமைந்த முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு மற்றும் தற்போதைய தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசும், ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.
இந்நிலையில், தனது நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பதவியில் இருந்து நீக்கப்பட்ட வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, டிசம்பர் மாதம் தனது மூத்த கட்சியினருடன் நாடு திரும்பி அந்நாட்டில் உள்ள கோர்ட்டில் சரணடையத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக மாணவர்கள் தலைமையிலான போராட்டங்கள் மீது கொடூரமான அடக்கு முறையை நடத்த உத்தரவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்காக, வங்காளதேச கோர்ட்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, டிசம்பர் மாதம் தாயகம் திரும்ப இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தன்னை சிறையில் அடைத்தாலும் பரவாவில்லை என்றும் சிறை தண்டனை அல்லது மரண தண்டனையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், ஜனநாயகம் மற்றும் நீதியை நிலைநாட்டவே திரும்புவதாகவும் அவர் கூறினார்.
வங்காளதேசத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அவரது மகன் சாஜிப் வாசித் ஜாய் குற்றம் சாட்டியுள்ளார். இந்த போராட்டங்கள் அமைதியான மாணவர் இயக்கம் அல்ல என்றும், திட்டமிட்ட வன்முறை என்றும் ஹசீனா தெரிவித்தார். வங்காளதேச நிலைமை கவலையளிப்பதாகவும், சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.