நான் ஏற்கனவே சிறையை பார்த்தவன்... செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி

மக்கள் பிரச்சினைகளில் தவெக அரசு கவனம் செலுத்தவில்லை என்று செந்தில் பாலாஜி கூறினார்.
நான் ஏற்கனவே சிறையை பார்த்தவன்... செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி
Published on

சென்னை,

தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரைப் பேரம் பேச முயன்றதாகப் பதியப்பட்ட வழக்கில், சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி நிபந்தனை கையெழுத்திட்ட பின்னர் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட 5 நாள் விலக்கு கேட்டு கடிதம் எழுதியிருந்தேன். வழக்கு குறித்து மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்க இருந்ததால் அவகாசம் கேட்டிருந்தேன். அமைச்சர் சொன்னது போல் நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நான் ஏற்கனவே சிறையை பார்த்தவன்.. எதற்கும் பயந்து ஓட வேண்டிய அவசியம் இல்லை.

தவெக அரசு எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்; எத்தனை வழக்குகள் போட்டாலும் அனைத்தும் பொய்யானவை என்பதை நிரூபிப்பேன். தவெக அரசு அமைந்ததிலிருந்தே தமிழ்நாட்டு மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், வழக்கு போடுவது, கைது செய்வது, வழக்கில் தொடர்பில்லாதவர்களை வழக்கில் சேர்ப்பது போன்ற செயல்களில் தவெக அரசு ஈடுபட்டு வருகிறது. காவிரி, பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பிரச்சினைகளில் தவெக அரசு கவனம் செலுத்தவில்லை. மின் கட்டணம் உயர்ந்தது தொடர்பாக பதில் ஏதும் சொல்லாமல் அமைச்சர் நிர்மல்குமார் திசை திருப்புகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com