ஜெயலலிதா மரண அறிக்கை...! நான்தான் அன்னைக்கே சொன்னேனே... திட்டினீங்க.. ஆதாரத்துடன் கஸ்தூரி!

நடிகை கஸ்தூரி, 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டதாக தான் கூறியதை நினைவு கூர்ந்துள்ளார்.
ஜெயலலிதா மரண அறிக்கை...! நான்தான் அன்னைக்கே சொன்னேனே... திட்டினீங்க.. ஆதாரத்துடன் கஸ்தூரி!
Published on

சென்னை

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் மாதம் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

விசாரணை ஆணையம் ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், காவல்துறை உயரதிகாரிகள், போயஸ் கார்டனில் பணி செய்தவர்கள் ஆணையம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றது.

இதையடுத்து 608 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்தது.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

அறிக்கையில் 22.09.2016 அன்று இரவு சுயநினைவற்ற நிலையில் போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்வதை பற்றி டாக்டர் சுமின் சர்மா விளக்கிய பிறகும் ஆஞ்சியோ செய்யப்படவில்லை.

டாக்டர் ரிச்சர்டு பீலே, ஜெயலலிதாவின் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்தச் செல்ல தயார் என கூறியும் அது ஏன் நடக்கவில்லை. போயஸ் கார்டனில் மயங்கி விழுந்து ஜெயலலிதா மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டதற்கு பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதா இறந்த தேதி குறித்து முரண்பட்ட தகவல்கள் உள்ளன. ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள். 2016 டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்தது.

ஜெயலலிதா டிச. 5ம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறியிருந்த நிலையில் டிச. 4ம் தேதியே இறந்தார் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால் ஜெயலலிதாவின் மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுவதை தவிற வேறு எந்த ஆதாரங்களும், ஆவணங்களும் ஆணையத்தில் முன்வைக்கப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவக்குழு 5 முறை அப்போலோ வந்திருந்தாலும் ஜெயலலதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை.

சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி, 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டதாக தான் கூறியதை நினைவு கூர்ந்துள்ளார். அப்போது அவர் ஷேர் செய்த பதிவை தற்போது ஷேர் செய்துள்ள கஸ்தூரி, 2016 டிசம்பர் 4ஆம் தேதி தனக்கு நன்றாக நினைவிருப்பதாகவும் கிசுகிசுக்கள் அதிகமாக இருந்தது.

அதனால் தான் டுவிட்டியதாகவும் பின்னர் கடுப்பாகி அதனை டெலிட் செய்ததாகவும் பதிவிட்டுள்ளார். ஆனால் பேஸ்புக் லிங்க் அப்படியே இருந்ததாக குறிப்பிட்டுள்ளார் கஸ்தூரி.

மேலும் ஆறுமுகசாமி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திருக்குறளையும் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கத்தோடு ஷேர் செய்துள்ளார் நடிகை கஸ்தூரி. அதாவது,

காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா

வேலாள் முகத்த களிறு.

பாகனுக்கு அடங்காததும், தன்னை எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட அதைக் கொன்றுவிடும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com