தகாத பொருளில் பேசியதற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி அறிக்கை

உள் அரங்கக் கூட்டத்தில் தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தகாத பொருளில் பேசியதற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி அறிக்கை
Published on

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரின் பெருந்தொண்டர் திருவாரூர் கே.தங்கராசு நூற்றாண்டு விழா சென்னையில் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திமுக எம்.பி. கனிமொழியும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டது. திமுக துணை பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து பொன்முடி விடுவிக்கப்படுகிறார் என்று திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து திமுக துணை பொதுச் செயலாளராக திருச்சி சிவா எம்.பி. நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் திமுக முன்னாள் துணை பொதுச் செயலாளரும், வனத்துறை அமைச்சருமான பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com