

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட பிறகு செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்கில் புகாரிலும் பெயர் இல்லை. எப்.ஐ.ஆரிலும் பெயர் இல்லாத நிலையிலும் என் பெயர் சேர்க்கப்பட்டு அதற்காக முன் ஜாமீன் பெற்று காவல் நிலையத்தில் தொடர்ந்து காலையும் மாலையும் கையெழுத்திட்டு வருகிறேன். லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதலாக ஒருவழக்கு பதிவு செய்து, நான் தங்கியிருந்த அறைகளிலும் பல்வேறு இடங்களிலும் சோதனை செய்து வழக்கை பதிவு செய்து உள்ள்னர். அந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறுவதற்காக மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசித்தேன்.
இதனால், கையெழுத்திடுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று விசாரணை அதிகாரிக்கு கடிதம் அனுப்பியிருந்தேன். சென்னை உயர் நீதிமன்றத்திலும் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதற்கான அனுமதிவேண்டும் என்று தாக்கல் செய்து இருந்தோம். உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கிய நிலையில், காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறேன்.
இருவர் கைது செய்யப்பட்டதில் ஒருவர் பெயர் எப்.ஐ.ஆரில் உள்ளது. இன்னொருவர் பெயர் எப்.ஐஆரிலேயே இல்லை. அவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சட்டப்படி வழக்கை எதிர்கொள்ள தயாராகி இருக்கிறோம். வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கப்பூர்வமான அரசு என்றால் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை , தேவைகளை நிறைவேற்றும் பணிகளில் கவனம் செலுத்தும். ஆனால், தவெக அரசு வழக்கு போடுவதில் தவெக அரசு முனைப்பு காட்டி வருகிறது. நீதிமன்றம் இருக்கிறது. எத்தனை வழக்குகள் போட்டாலும் நீதிமன்றத்தில் எதிர்கொண்டு இந்த வழக்குகள் அனைத்தும் பொய்யானவை என்பதை நிரூபித்து காட்டுவோம்” என்றார்.