‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 11 Sept 2025 11:45 AM IST (Updated: 11 Sept 2025 5:58 PM IST)
t-max-icont-min-icon

ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பத்தினர் சேர்ந்து, 'தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்’ என உறுதி ஏற்கிறோம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் இணைந்துள்ளதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்க நமது ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் (செப்.15) தமிழ்நாடெங்கும் 68,000-க்கும் அதிகமான பூத் வாரியாக முன்மொழியவுள்ள உறுதிமொழி:

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்! ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடிக்கும் அதிகமான குடும்பத்தினரும் சேர்ந்து, 'தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்’ என உறுதி ஏற்கிறோம்!

நான், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

நான், வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக நிற்பேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

நான், நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன். ஒருபோதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

நான், தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு, நன்மதிப்பிற்கு எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

நான், 'பெண்கள் விவசாயிகள்-மீனவர்கள்-நெசவாளர்கள் தொழிலாளர்கள்' என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.”

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story