

சென்னை,
எழுத்தாளர்களுக்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டை ரத்து செய்ததை எதிர்த்து, கவிஞர் வைரமுத்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வைரமுத்து தரப்பில், ஏற்கெனவே ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை பின் தேதியிட்டு அமல்படுத்துவதாக அரசு தலைமை வழக்கறிஞர் கோர்ட்டில் தெரிவித்தார்.
அவருக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்ற ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்று வைரமுத்து தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் செயல். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இணை அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர். இது துரதிருஷ்டவசமானது என்று கண்டனம் தெரிவித்தார்.
எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்தது உணர்வுப்பூர்வமான விஷயம். இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தெரியாது. அவர்கள் அதிகார தொனியிலேயே செயல்படுவார்கள்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி இதை ஒருபோதும் அனுமதித்து இருக்க மாட்டார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை இணை அரசாங்கம் நடத்த அனுமதித்தால், அது பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று நீதிபதி எச்சரித்தார்.