திருச்செந்தூரில் ஆம்னி பஸ் ஆட்டோக்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பறிமுதல் சய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கூடுதல் கட்டணம்
திருச்செந்தூர் நகரில் இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் மற்றும் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அதனை முறைப்படுத்தி நியாயமான கட்டணங்கள் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் திருச்செந்தூர் நகரில் உள்ள 30 ஆம்னி பஸ்களில் சோதனை செய்தனர்.
இதில் விதிகளை மீறியதாக 6 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.7 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
நடவடிக்கை
மேலும், ஆம்னி பஸ்கள் மற்றும் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்காமல் குறிப்பாக சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் நியாயமான கட்டணம் தான் பயணிகளிடம் வசூலிக்க வேண்டும். விதிகளை மீறும் ஆட்டோக்கள், ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, சட்டப்படி பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.