நிலுவை சம்பளம் வழங்கினால் போராட்டத்தை கைவிடுவோம்

நிலுவை சம்பளத்தை வழங்கினால் மட்டுமே வேலைநிறுத்த போராட்டத்தை கைவிடுவோம் என கூடலூரில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எஸ்டேட் தொழிலாளர்கள் அறிவித்தனர்.
நிலுவை சம்பளம் வழங்கினால் போராட்டத்தை கைவிடுவோம்
Published on

கூடலூர்

நிலுவை சம்பளத்தை வழங்கினால் மட்டுமே வேலைநிறுத்த போராட்டத்தை கைவிடுவோம் என கூடலூரில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எஸ்டேட் தொழிலாளர்கள் அறிவித்தனர்.

நிலுவை சம்பளம்

கூடலூர் சில்வர் கிளவுட் பகுதியில் தனியார் எஸ்டேட்டில் நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு 5 மாத நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், எஸ்டேட் நிர்வாகம் காலதாமதம் செய்து வருகிறது. இதனால் நிலுவை சம்பளம் மற்றும் பண பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 3 மாதங்களாக தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று முன்தினம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா தலைமையில் தாசில்தார் ராஜேஸ்வரி, தொழிலாளர் நல உதவி ஆணையர் முருகேசன், கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் எஸ்டேட் நிர்வாக அலுவலர்கள், தொழிலாளர்கள் தரப்பில் ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் முகமது கனி, குணசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உடன்பாடு ஏற்படவில்லை

இதில் நிலுவை சம்பளம் வழங்குவது தொடர்பாக எஸ்டேட் நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்படவில்லை. இருப்பினும் பல கட்டமாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் நிலுவை சம்பளம் வழங்கினால் மட்டுமே வேலைநிறுத்த போராட்டத்தை கைவிடுவோம் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வருகிற 4-ந் தேதி குன்னூர் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடத்தப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, நிலுவை சம்பளம் வழங்கினால் மட்டுமே வேலை நிறுத்தத்தை கைவிட முடியும். அதுவரை போராட்டம் தொடரும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com