

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையை தரவில்லை. 234 தொகுதிகளில் ஆட்சி அமைக்க குறைந்தது 118 தொகுதிகள் இருக்க வேண்டும். ஆனால் த.வெ.க.வுக்கு 108 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். த.வெ.க. தனித்து போட்டியிட்டதால் கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கையும் கிடையாது. எனவே தொங்கு சட்டசபை ஏற்பட்டு உள்ளது.
இருப்பினும் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியது. எனவே தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. அதற்கு முதல் ஆளாக ஓடி வந்து கை கொடுத்தது காங்கிரஸ். அந்த கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள், இப்போது த.வெ.க.வுடன் சேர்ந்து இருப்பதால் அதன் பலம் 112 என உயர்ந்து இருக்கிறது. இருப்பினும் இன்னும் 6 எம்.எல்.ஏ.க் கள் தேவை.
அதில் 2 கம்யூனிஸ்டுகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய 3 கட்சிகளைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களும், பா.ம.க.வும் உடனடியாக ஆதரவு தருவார்கள் என்று த.வெ.க. நினைத்தது. ஆனால் அந்த கட்சிகள் பிடிகொடுக்காமல், உயர்நிலை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று கூறியது. அதில் பா.ம.க. எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் த.வெ.க. முதலில் ஆட்சி பொறுப்பேற்று விடலாம் பின்னர், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கலாம் என்று திட்டமிட்டது.
எனவே உடனடியாக கடந்த 7-ந் தேதி (அதாவது நேற்று) முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்கும் வகையில் அந்த கட்சி நடவடிக்கை எடுத்தது. ஆனால் அதற்கு கவர்னர் அர்லேகர் முட்டுக்கட்டை போட்டு விட்டார்.
அதாவது கடந்த 6-ந்தேதி மாலை விஜய், கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோரினார். ஆனால் கவர்னர் எந்த பதிலும் தரவில்லை. இருந்தாலும், த.வெ.க.வுக்கு பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ. இல்லாததால் முதல்-அமைச்சராக விஜய்க்கு அனுமதி தரவில்லை என்று கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் நேற்று காலை திடீர் திருப்பமாக கவர்னர் அர்லேகர், விஜய்யை கவர்னர் மாளிகைக்கு வருமாறு அழைத்தார். அதனை ஏற்றுக்கொண்டு விஜய், பட்டினப்பாக்கம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு சுமார் காலை 10.35 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு வந்தார். அங்கு அவர் கவர்னர் அர்லேகரை சந்தித்து பேசினார். சுமார் அரைமணி நேரமாக நடந்த பேச்சுவார்த்தை முடிந்து, மீண்டும் விஜய் பட்டினப்பாக்கம் இல்லம் புறப்பட்டு சென்றார்.
கவர்னருடனான இந்த சந்திப்பு குறித்து த.வெ.க. எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் இந்த சந்திப்பு நடந்து சில மணி நேரம் கழித்து. அதாவது பகல் 2.31 மணிக்கு கவர் னர் மாளிகையில் ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.
அதில், "கவர்னர் அர்லேகர், தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்யை சென்னை கவர்னர் மாளிகைக்கு அழைத்தார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் அரசு அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை ஆதரவு இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்று கவர்னர் விளக்கமளித்தார்" என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த செய்தியின் மூலம் கவர்னர் அர்லேகர், த.வெ.க.வுக்கு பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்கள். இல்லாததால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்கவில்லை என்ற தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார். ஆனால் விஜய், பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்கிறோம். எனவே சட்டப்படி ஆட்சி அமைப்பதற்கு முதலில் அனுமதி தாருங்கள் என்ற கோரிக்கை வைத்து இருக்கிறார்.
ஆனால் அதனை கவர்னர் ஏற்றுக்கொள்ளவில்லை. 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு என்ற எண்ணிக்கையை கொடுத்தால்தான் ஆட்சி அமைக்க அனுமதி தர முடியும் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
எனவே கவர்னரின் நடவடிக்கையால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து த.வெ.க. நேற்று தீவிர ஆலோசனை நடத்தியது. அதன் தொடர்ச்சியாகத்தான் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆதரவை விரைவாக பெற த.வெ.க.வினர், அந்த கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.
இதுஒருபுறம் இருக்க, திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கவுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், புதுச்சேரியில் உள்ள சொகுதி விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு ஆலோசனை நடத்தினார். சென்னையில் திமுக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், அவசர முடிவுகளை எடுக்க அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் இருந்து இன்று சென்னைக்கு திரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசு பொறுப்பேற்கும் வரை அவர்கள் சென்னையில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயற்குழுக் கூட்டம் தொடங்கி உள்ளது. தவெகவிற்கு முழு ஆதரவா? இல்லையா? என்பதை இன்று மாலைக்குள் அறிவித்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே திமுக- அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையா? டி.கே.எஸ். இளங்கோவன்: எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அதனை மறுத்திருக்கிறார். அவர் முடிவெடுப்பார். அப்படி அவர் ஒரு முடிவெடுத்தால் அதனை திமுக ஏற்றுக்கொள்ளும்; ஆனால் அந்த முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என்றார்.
இந்தநிலையில், அதிமுகவுக்கு திமுக ஆதரவு அளித்தால் பாஜகவின் நிலைப்பாடு என்ன என சென்னை பாஜக அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏ உள்ள நிலையில் ஆலோசனை கூட்டத்தில் பாஜகவின் ஒரே எம்எல்ஏ போஜராஜன் பங்கேற்றுள்ளார்.