தமிழகத்தில் மீண்டும் தேர்தல் நடந்தால்; விஜய் 180 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவார்: வைகோ பேட்டி

தமிழகத்தில் தலைவிரித்து ஆடிய ஊழல் என்னும் கொடிய நோயை த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் ஒழித்துள்ளார் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ
Published on

தூத்துக்குடி,

தமிழகத்தில் இப்போது மீண்டும் தேர்தல் நடந்தால் கூட விஜய் 180 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவார் என்பதே தற்போதைய கள நிலவரம் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

சீமை கருவேல மரங்கள் அகற்றும் திட்டம்

சுற்றுச்சூழலுக்குப் பெரும் கேடு விளைவிக்கும் சீமை கருவேல மரங்களை தமிழ்நாட்டில் இருந்து வேரோடு அகற்றுவதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நீண்ட காலமாக தீவிர சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருவதோடு, களப்பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி பகுதிக்கு உட்பட்ட சத்திரப்பட்டியில் சீமை கருவேல மரங்களை அகற்றும் திட்டத்தை வைகோ கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது:

ஸ்டெர்லைட் பிரச்சினை, முல்லை பெரியாறு அணை பிரச்சினை, சீமை கருவேல மரங்கள் அகற்றம் என பல்வேறு பிரச்சினைகளுக்காக 20 ஆண்டு காலமாக போராடி வருகிறேன். முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரளா அரசு தீவிரமாக இருந்தபோது, அதை எதிர்த்து நடைபயணம், மறியல் என போராட்டங்களை நடத்தினோம்.

தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்தபோது, அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தடை வாங்கப்பட்டது. மேகதாது அணை பிரச்சினைக்கு எதிராகவும் கட்சி பாகுபாடின்றி போராடினோம். தமிழக அரசு சீமை கருவேல மரங்களை அகற்றுவதை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்.

ஊழல் என்னும் கொடிய நோய் ஒழிப்பு

பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்பது தொடக்க கால கோரிக்கை. ஆனால், நிதி நெருக்கடிக்கு இடையே அதை எப்படி செயல்படுத்த முடியும்? கல்வி நிறுவனங்கள் தொடங்க கூடுதல் கட்டணம் கேட்கப்படுகிறது. தமிழகத்தில் தலைவிரித்து ஆடிய ஊழல் என்னும் கொடிய நோயை த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் ஒழித்துள்ளார்.

விஜய் 180 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவார்

தற்போதைய சூழலில் த.வெ.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெற்றுள்ளது. செந்தில் பாலாஜி அண்ணா தி.மு.க.வில் இருந்தபோது எவ்வளவு ஊழல் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் இப்போது மீண்டும் தேர்தல் நடந்தால் கூட விஜய் 180 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவார் என்பதே தற்போதைய கள நிலவரம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com