‘ரேஷனில் கை வைக்கலாம் என்று நினைத்தால் உங்கள் கதை முடிந்துவிடும்’ - பெ.சண்முகம்

ரேஷன் கடைகளில் அரிசி போட வேண்டாம் என்ற முடிவை நோக்கி போய்விடுவார்களோ என்று பதற்றமாக இருக்கிறது என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
‘ரேஷனில் கை வைக்கலாம் என்று நினைத்தால் உங்கள் கதை முடிந்துவிடும்’ - பெ.சண்முகம்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“சட்டமன்றத்தில் ஒரு அமைச்சர், ரேஷன் அரிசியில் மக்கள் சோறாக்கி சாப்பிடுவது இல்லை என்றும், ஆடு, மாடு, கோழிக்குதான் போடுகிறார்கள் என்றும் கூறுகிறார். மற்றொரு அமைச்சர், ரேஷன் அரிசியை மக்கள் இட்லி, தோசைக்கு மாவு அரைத்துதான் சாப்பிடுகிறார்கள் என்று சொல்கிறார். இட்லி, தோசை எல்லாம் உணவு கணக்கில் வராதா?

சாப்பிடும் வகையில் இருந்தால் மக்கள் சாப்பிட மாட்டார்களா? இதில் என்ன பெருமை இருக்கிறது உங்களுக்கு? மக்கள் சாப்பிடும் வகையிலான அரிசியாக இருந்தால் கட்டாயம் சாப்பிடுவார்கள். இந்த மாதிரி காரணங்களை சொல்லி, ரேஷன் கடைகளில் இனிமேல் அரிசி போட வேண்டாம் என்ற முடிவை நோக்கி போய்விடுவார்களோ என்று எனக்கு பதற்றமாக இருக்கிறது.

ரேஷன் கடைகளில் ஒரு கார்டுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல லட்சக்கணக்கான குடும்பங்கள் அதை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தனித்து வாழக்கூடிய ஏராளமான பெண்கள், தனித்து வாழக்கூடிய முதியவர்கள் பலர் அதை நம்பி வாழ்கிறார்கள். அந்த அரிசிதான் அவர்களின் உயிரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

இதெல்லாம் அமைச்சர்களுக்கு தெரியுமா, தெரியாதா என்று தெரியவில்லை. அமைச்சர்கள் ஓட்டு கேட்டு சென்றதுபோல், ரேஷன் கடைகளில் யார் அரிசி வாங்குகிறார்கள்? அதை வைத்து என்ன செய்கிறார்கள்? என்பதை வீடு வீடாக சென்று கொஞ்சம் கேட்டாள் மக்கள் சொல்வார்கள். சட்டசபையில் உட்காந்து சொல்வதை விட, தெருக்களில் வந்து மக்களிடம் கேட்டுவிட்டு பிறகு சட்டசபையில் போய் பேசினால் சிறப்பாக இருக்கும். எனவே, தப்பி தவறி கூட ரேஷனில் கை வைக்கலாம் என்று நினைக்க வேண்டாம். ரேஷனில் கை வைத்தால் உங்கள் கதை முடிந்துவிடும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com