சாலையோர கடைகளிடம் சட்ட விரோதமாக வரி வசூல் - மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

கரூர் மாநகராட்சியில் சாலையோர கடைகளிடம் சட்ட விரோதமாக வரி வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.
சாலையோர கடைகளிடம் சட்ட விரோதமாக வரி வசூல் - மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
Published on

கரூர்,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவகர் பஜார், மடவளாகம் உள்ளிட்ட இடங்களில் ரெடிமேட் ஆடைகள், ஜவுளி துணிகள், பேன்சி பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் என 500-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள், ஆண்டுதோறும் தீபாவளியை ஒட்டி நான்கைந்து நாட்கள் கடைகள் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் கடைகளுக்கு தினசரி 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை வரி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், கரூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் வரி வசூலுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

இருப்பினும் வியாபாரிகளிடம் சிலர், சட்ட விரோதமாக வரி வசூலிப்பதாக வந்த புகாரை அடுத்து, ஆணையர் சரவணகுமார், மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தரைக்கடை வியாபாரிகள் யாருக்கும் வரி கொடுக்கக் கூடாது என்றும், பணம் கேட்கும் நபர்கள் குறித்து புகார் தெரிவிக்குமாறும் கூறினார். இந்த உத்தரவால், வெளிமாவட்டங்களில் இருந்து வந்துள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com