

சென்னை,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
அமெரிக்கா, இஸ்ரேல் சேர்ந்து ஈரான் மீது நடத்தும் இராணுவ ரீதியான தாக்குதல்களின் காரணமாக, நாடு முழுவதும் வீடு மற்றும் வணிக நிறுவனங்களின் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உணவு விடுதிகள், தேனீர் கடைகள் போன்றவை மூடப்பட்டுள்ளன. சமையல் எரிவாயு கிடைக்காமல் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், சமையல் எரிவாயு உருளைகளை பதுக்கி வைத்து கள்ளத்தனமாக அதிக விலைக்கு விநியோக நிறுவனங்கள் விற்பதாக கூறப்படுகிறது. எனவே, சமையல் எரிவாயு பதுக்கலையும், அதிக விலைக்கு கள்ளத்தனமாக விற்கப்படுவதையும் தடுத்திட, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும், இக்குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.