எண்ணெய் கழிவு பாதிப்பு: எண்ணூர் காட்டுக்குப்பம் பகுதியில் கமல்ஹாசன் ஆய்வு

பைபர் படகில் சென்று எண்ணெய் கழிவு பாதிப்புகளை ம.நீ.ம. கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பார்வையிட்டார்.
எண்ணெய் கழிவு பாதிப்பு: எண்ணூர் காட்டுக்குப்பம் பகுதியில் கமல்ஹாசன் ஆய்வு
Published on

சென்னை,

புயல் காரணமாக பெய்த பலத்த மழையின்போது தொழிற்சாலையில் இருந்து கச்சா எண்ணெய் கழிவு மழைநீருடன் கலந்து பக்கிங்காம் கால்வாய் வழியாகத் தாழ்வான பகுதிகளில் படிந்துள்ளது. இந்த கழிவுகள் கொசஸ்தலை ஆற்று நீரில் கலந்து, எண்ணூர் கடலிலும் கலந்ததால் 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடலில் கச்சா எண்ணெய் கழிவு படிந்துள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. கடலோர காவல் படையினர் எண்ணெய் கழிவுகளை அழிப்பதற்காக ரசாயன பொடிகளை கடலில் தூவி உள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு எண்ணெய் கழிவுகளை அகற்றுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், எண்ணூர் காட்டுக்குப்பம் பகுதியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், படகு மூலம் சென்று ஆய்வுசெய்து வருகிறார். தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் குறைகளையும் கேட்டு வருகிறார்.   

X

Daily Thanthi
www.dailythanthi.com