

மதுரை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்த் தனது புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடப்போவதாக கூறியிருப்பது, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆதரவாளர்களுடன் ஜனவரி 3 ஆம் தேதி ஆலோசனை நடத்திய பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கான ஆயத்தப்பணிகளில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மதிரை பாண்டிக்கோவில் அருகே உள்ள மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தில் புதிய கட்சி தொடங்குவது, கூட்டணி உள்ளிட்ட பல்வேறு தனது ஆதரவாளர்களுடன் கலந்து பேசிய பின்னர் மு.க.அழகிரி முக்கிய முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.