

சென்னை,
அரசு பேருந்துகளை உரிய பேருந்து நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும் என்று ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், ஓட்டுநர்கள் பேருந்துகளை சாலையின் இடதுபுற ஓரமாக உரிய நிறுத்தத்தில் நிறுத்தாமல் பேருந்து நிறுத்தத்தை விட்டு தள்ளி நிறுத்துவதால் பயணிகள் சிரமத்துடன் ஓடிசென்று ஏறும் சூழல் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலையும் சில நேரங்களில் மரண விபத்து ஏற்பட ஏதுவாகிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து ஓட்டுநர், நடத்துனர்களும் பேருந்தை சாலையின் இடதுபுறமாக ஓரமாக உரிய பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்கி விட உத்தரவிடப்பட்டுள்ளது.
பேருந்தை சாலையின் நடுவில், பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தக்கூடாது என்றும் பயணச்சீட்டு பரிசோதகர்களை ஈடுபடுத்தி வருவாய் முழுமையாக ஈட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.