குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி லாரிகள் சிறைபிடிப்பு

ரெட்டிப்பாளையம் கிராமத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி லாரிகள் சிறைபிடிப்பு
Published on

குண்டும், குழியுமான சாலை

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியை அடுத்த ரெட்டிப்பாளையத்தில் இருந்து வெளிப்பிரிங்கியம் செல்லும் தார் சாலையில் சிமெண்டு ஆலைகளுக்கு செல்லும் லாரிகள் அதிகளவு பாரம் ஏற்றி செல்கிறது. இதனால் அந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அந்த சாலை சேறும், சகதியுமாக மாறி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

லாரிகள் சிறைபிடிப்பு

இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் ரெட்டிப்பாளையம்-வெளிப்பிரிங்கியம் சாலையில் சிமெண்டு ஆலைக்கு செல்லும் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் அந்த சாலையை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com