தேனி அருகே சொத்து தகராறில் கத்தியால் குத்தி தொழிலாளி படுகொலை

தேனி அருகே சொத்து தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்திக் கொலை செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
தேனி அருகே சொத்து தகராறில் கத்தியால் குத்தி தொழிலாளி படுகொலை
Published on

தொழிலாளி கொலை

தேனி அருகே சரத்துப்பட்டியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 54). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தங்கமலை (48). ஜெயபால் தனது மனைவிக்கு சொந்தமாக சங்ககோணாம்பட்டியில் இருந்த 2 சென்ட் நிலத்தை தேனியை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்தார்.

நேற்று அந்த நிலத்தை அளவீடு செய்து கற்கள் ஊன்றுவதற்காக ஜெயபால் மற்றும் சிலர் சங்ககோணாம்பட்டிக்கு வந்தனர். அப்போது தங்கமலையின் தம்பி ஜெயராம் (43), தனது மனைவி முத்துபிரியாவுடன் அங்கு வந்தார். தனது அக்காளின் நிலத்தில் தனக்கும் பங்கு உள்ளதாக கூறி அவரும், அவருடைய மனைவியும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது ஜெயராம் தனது அக்காள் கணவர் ஜெயபாலின் முகத்தில் மஞ்சள் பொடியை தூவினார். அவர் சுதாரிப்பதற்குள் மறைத்து வைத்து இருந்த கத்தியால் அவருடைய மார்பு பகுதியில் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த ஜெயபால் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தம்பதி கைது

தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் ஜெயபால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராம், முத்துபிரியா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைதான ஜெயராம் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com