

மதுரை
மதுரை மாவட்டத்தில் பாரபட்சம் இல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி, நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மதுரை மாவட்டத்தில் பாரபட்சம் இல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் தடுப்பூசி, நோய் தடுப்பு நடவடிக்கைகள், வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.பி.ரவீந்திரநாத்குமார், எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அனிஸ்சேகரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரையில் கொரோனா புயல் வேகத்தில் பரவி வருகிறது. பரவலுக்கான காரணத்தை தமிழக அரசு கண்டறிய வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உயர் அதிகாரிகளை மாற்றியதால் பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு 3 நாட்கள் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்சு இல்லாமல் கொரோனா நோயாளிகளை சரக்கு வாகனத்தில் ஏற்றி வரும் நிலை உள்ளது. படுக்கை வசதிக்கு ஏற்ப மருத்துவர், செவிலியர் இல்லை. இதில் தமிழக அரசு வெளிப்படை தன்மையோடு செயல்படவில்லை. 6-வது முறையாக ஆட்சிக்கு வந்த தி.மு.க., புதிய அரசு என கூறமுடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறும்போது,
தற்போது மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதில் மதுரை திருமங்கலம், திருப்பரங்குன்றம், மேலூர், உசிலம்பட்டி, மேற்கு ஆகிய 5 தொகுதிகளுக்கு பாரபட்சம் பார்க்கப்படுகிறது. அதே போல் நோய் தடுப்பு நடவடிக்கையிலும் இந்த தொகுதியில் வித்தியாசம் காண்பிக்கப்படுகிறது. எனவே மதுரை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தடுப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.