

பவானிசாகர்
பவானிசாகரில் போலி முகவரி கொடுத்து பாஸ்போர்ட் எடுக்க முயன்ற இலங்கை அகதியை போலீசார் கைது செய்தனர்.
பாஸ்போர்ட்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகரில் வசிக்கும் கவுசிகன் என்பவர் வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் வேண்டுமென்று ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தார்.
வழக்கமாக யார் பாஸ்போர்ட் எடுக்க விண்ணப்பித்து இருந்தாலும் அவர்களுடைய முகவரிக்கு அந்த பகுதி போலீசார் நேரில் சென்று விண்ணப்பித்தவர் அவர் தானா?, அதே முகவரியில் தான் வசிக்கிறாரா? என்று விசாரணை நடத்துவார்கள் அதன்படி பவானிசாகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் கவுசிகன் வீட்டுக்கு விசாரிக்க சென்றனர்.
போலி முகவரி
போலீசார் விசாரணையில், ஆன்லைன் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட முகவரியில் வேறு ஒருவர் வசிப்பது தெரியவந்தது. இதனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்து இருந்த கவுசிகன் பவானிசாகரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கை அகதி என்பது தெரியவந்தது.
இலங்கை அகதிகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுவதில்லை. ஆனால் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முடிவு செய்த கவுசிகன், தன்னுடைய நண்பரின் முகவரியை தன்னுடைய முகவரி என்று போலியாக கொடுத்து பாஸ்போர்ட் எடுக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுசிகனை கைது செய்தனர்.