

சென்னை,
வருமான வரித்துறை மாத ஊதியதார்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகை டி.டி.எஸ். என்ற வகையில் வரிப்பிடித்தம் செய்யப்படுகிறது. அவ்வாறு பிடிக்கப்படும் தொகையில் வரி போக மீதம் உள்ள தொகையை, கணக்கு தாக்கல் செய்த பின்னர் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பாக இப்போது போலி எஸ்.எம்.எஸ். மூலம் மோசடி அரங்கேறுகிறது.
இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வருமானவரி செலுத்துவோருக்கு செல்போன்களில் போலியான தகவல்களுடன் குறுந்தகவல்கள் வருகின்றன. அதில், குறிப்பிட்ட தொகை, உங்களுக்கு வருமானவரி ரீபண்ட்டாக அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு கீழே குறிப்பிட்டுள்ள இணைப்புக்குள் நுழைந்து, ரீபண்ட் பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும் என தெரிவிக்கப்படுகிறது.
அதுபோன்ற தகவல்கள் வந்தால், அந்த இணைப்புக்குள் செல்ல வேண்டாம். வருமானவரி துறை சார்பில், அதுபோன்ற தகவல்கள் அனுப்பப்படுவதில்லை. ரீபண்ட் தொடர்பான நடவடிக்கைகளை, வருமான வரித்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.