லால்பேட்டையில் விரால் மீன் குஞ்சுகள் வளர்ப்பிற்காக தொட்டிகள் அமைக்கும் பணி கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு

லால்பேட்டையில் விரால் மீன் குஞ்சுகள் வளர்ப்பிற்காக தொட்டிகள் அமைக்கும் பணியை கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.
லால்பேட்டையில் விரால் மீன் குஞ்சுகள் வளர்ப்பிற்காக தொட்டிகள் அமைக்கும் பணி கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு
Published on

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. இந்த ஏரி பாசனத்திற்கு மட்டுமல்லாது உள்நாட்டு மீனவர்கள் பயன் பெறும் வகையில் மீன்வளத்துறை சார்பில் விரால் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு ஆண்டுதோறும் ஏரியில் விடப்படுவது வழக்கம். தற்போது லால்பேட்டையில் மீன்தொட்டிகள் அமைத்து மீன்குஞ்சு வளர்ந்தவுடன் ஏரியில் விடப்படுகிறது. மேலும் பண்ணை குட்டைகள் அமைக்கும் விவசாயிகளுக்கும் மீன் குஞ்சுகள் கொடுக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் விரால் மீன் குஞ்சுகள் வளர்க்கும் பணிக்காக ரூ.5 கோடி மதிப்பில் லால்பேட்டையில் மீன் தொட்டிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணியை விரைந்து முடிக்க பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

24 லட்சம் விரால் மீன் குஞ்சுகள்

பிரதம மந்திரியின் சம்பத் யோஜனா திட்டத்தின் கீழ் தமிழகத்திலேயே முதல் முறையாக கடலூர் மாவட்டத்தில் விரால் மீன் குஞ்சுகள் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆண்டுதோறும் லால்பேட்டையில் உள்ள மீன்வளத்துறையின் சார்பில் பல்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்பட்ட 24 லட்சம் விரால் மீன் குஞ்சுகள் வீராணம் ஏரியில் விடப்படுகிறது. தற்போது கூடுதலாக லால்பேட்டையில் விரால் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை உள்நாட்டு மீனவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மீன்வளத்துறை உதவி இயக்குனர் குமரேசன் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com