கொரோனா: தமிழகத்தில் 97 சதவீதம் பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் இதுவரை 97 சதவீதம் பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். மேலும் நேற்று புதிதாக 1,235 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா: தமிழகத்தில் 97 சதவீதம் பேர் குணமடைந்தனர்
Published on

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய (வெள்ளிக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 69 ஆயிரத்து 999 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 772 ஆண்கள், 463 பெண்கள் என மொத்தம் 1,235 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 2 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 51 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 270 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 307 பேரும், கோவையில் 115 பேரும், சேலத்தில் 73 பேரும், திருவள்ளூரில் 70 பேரும், செங்கல்பட்டில் 69 பேரும், குறைந்தபட்சமாக அரியலூர், கள்ளக்குறிச்சியில் தலா 2 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பெரம்பலூரில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை. தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 25 லட்சத்து 19 ஆயிரத்து 251 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 7 லட்சத்து 96 ஆயிரத்து 475 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் 4 லட்சத்து 81 ஆயிரத்து 239 ஆண்களும், 3 லட்சத்து 15 ஆயிரத்து 202 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 34 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 28 ஆயிரத்து 173 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 412 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 9 பேரும், தனியார் மருத்துவமனையில் 8 பேரும் என 17 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 6 பேரும், கோவை, தஞ்சாவூர், தேனியில் தலா 2 பேரும், செங்கல்பட்டு, திண்டுக்கல், காஞ்சீபுரம், நாமக்கல், திருவள்ளூரில் தலா ஒருவரும் என 9 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 11,870 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 1,311 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 315 பேரும், செங்கல்பட்டில் 96 பேரும், கோவையில் 92 பேரும், திருவள்ளூரில் 68 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 306 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். அந்தவகையில் இதுவரை 97 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது சிகிச்சையில் 10 ஆயிரத்து 299 பேர் உள்ளனர். தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 928 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 1,013 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 425 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com