தமிழகம் -புதுச்சேரியில் நவம்பர் 3 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

இன்று முதல் நவம்பர் 3 தேதி வரை வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது
தமிழகம் -புதுச்சேரியில் நவம்பர் 3 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
Published on

சென்னை,

வட கிழக்கு பருவ மழை கடந்த வாரம் தொடங்கிய நிலையில் தென் மேற்கு வங்க கடலில் தமிழகத்தின் அருகே மேலடுக்கு சுழற்சி உருவானது. அது மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை அருகே மையம் கொண்டுள்ளது.

இதன் காரணமாக கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், சென்னை மற்றும் வட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் இன்று முதல் மழை தீவிரம் அடையும் என்றும் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி சென்னையில் இன்று அதிகாலை முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் அனைத்துப் பகுதியிலும் மழை கொட் டியது. இதனால் காலை நேரத்தில் அலுவலகம் செல்வோர், பள்ளிக் கூடம் செல்லும் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டனர்.

தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றதால் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது.
சென்னையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றுதான் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் அளவுக்கு மழை பெய்துள்ளது. இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதியிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் இன்று முதல் நவம்பர் 3 தேதி வரை வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது

அக்டோபர் 30 முதல் நவம்பர் 3 வரையிலான 5 நாட்களுக்கான வானிலை முன்அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதில், அக்,30 ல் தமிழகம் மற்றம் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அனேக இடங்களில் கனமழை பெய்யக் கூடும். அக்.,31ல் தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதிகள், ராயலசீமா ஆகியவற்றில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 1 ல் ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதி, தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகியவற்றில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவ.,2 மற்றும் 3 ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் காலை முதலே பரவலாக கனமழை பெய்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com