காப்பகத்தில் சிறுமி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டாரா? சிறுவன் வாக்குமூலத்தால் பரபரப்பு

பாலியல் புகாரில் சிக்கிய தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமி கொலை செய்து புதைக்கப்பட்டதாக காப்பக சிறுவன் அளித்த வாக்குமூலத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காப்பகத்தில் சிறுமி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டாரா? சிறுவன் வாக்குமூலத்தால் பரபரப்பு
Published on

ஆவடி,

திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் 7-வது தெருவில் தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இங்கு தங்கி படித்து வந்த சிறுவர், சிறுமிகளுக்கு காப்பக ஊழியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி 46 சிறுவர், சிறுமிகளை மீட்டு, ஆவடி அடுத்த பொத்தூர் பகுதியில் உள்ள மற்றொரு தனியார் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் காப்பக உரிமையாளர்கள் ஜேக்கப் (வயது 68), அவருடைய மனைவி விமலா ஜேக்கப் (64), காப்பக மேலாளர் பாஸ்கர் (39), உதவியாளர் முத்து (27), காப்பாளர் பாபு சாமுவேல் (54) ஆகிய 5 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய காப்பகத்தில் இருந்த சிறுவர், சிறுமிகள் காப்பகத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து கடந்த 1-ந் தேதி மாஜிஸ்திரேட்டு முன்பு ரகசிய வாக்குமூலம் அளித்தனர். அதில் 13 வயது சிறுவன் ஒருவன், காப்பகத்தில் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளான். இதனால் இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிறுவனின் இந்த ரகசிய வாக்குமூலம் தற்போது வெளியே வர ஆரம்பித்துள்ளது. இதுதொடர்பாக நேற்று காலை ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

மேலும் இதுதொடர்பாக சிறையில் இருக்கும் காப்பக ஊழியர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் தான் சிறுமி கொலை செய்யப்பட்டு காப்பகத்தில் புதைக்கப்பட்டதாக சிறுவன் அளித்த வாக்குமூலம் உண்மையா? என்பது தெரியவரும். எனவே கைதானவர்களை விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com