சென்னையில் வக்கீல் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேர் விழுப்புரம் கோர்ட்டில் சரண்

சென்னையில் வக்கீல் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேர் விழுப்புரம் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர்.
சென்னையில் வக்கீல் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேர் விழுப்புரம் கோர்ட்டில் சரண்
Published on

செங்கல்பட்டு,

சென்னையை அடுத்த பெருங்குடி ராஜீவ்நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (வயது 33). இவருடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆகும். இவர், சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார். ஜெய்கணேசுக்கு திருணமாகி முருகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ஜெய்கணேஷ், நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் வெளியில் சென்றுவிட்டு, அதே பகுதியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடினார்.

அதன்பிறகு இரவு வீடு திரும்பினார். ராஜீவ் நகர் முதல் மெயின் ரோட்டில் உள்ள தனது வீட்டின் அருகே சென்றபோது அவரை பின் தொடர்ந்து வந்த மர்மகும்பல் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வக்கீல் ஜெய்கணேசை சரமாரியாக வெட்டினர்.

இதில் உடலில் பல இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஜெய்கணேஷ், ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜெய்கணேஷ் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த கொலை தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஜீவானந்தம், துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விழுப்புரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் வக்கீல் ஜெய்கணேஷை கொலை செய்ததாக சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த முருகன், பிரவீன் மற்றும் ஶ்ரீதர் ஆகிய மூன்று பேர் நீதிபதி ராதிகா முன்பு சரணடைந்தனர். குற்றவாளிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், கோர்ட்டு வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com