

சென்னை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். போக்குவரத்துக்கழகத்தில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்த அறிக்கையை முதலமைச்சர் பழனிசாமியிடம் அளித்தார் மு.க.ஸ்டாலின் டி.ஆர்.பாலு தலைமையிலான குழு இந்த போக்குவரத்து ஆய்வு அறிக்கையை தயாரித்துள்ளது. தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரும் பங்கேற்றார்.
போக்குவரத்து கழக இழப்பீடுகளை அரசே ஏற்க வேண்டும் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
முதல்-அமைச்சர் சந்திப்பிற்கு பின் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
போக்குவரத்துக் கழக சீரமைப்பு தொடர்பாக 27 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை முதலமைச்சரிடம் சமர்பிக்கப்பட்டது.
திமுக ஆய்வறிக்கையில் உள்ள 27 கோரிக்கைகளை அமல்படுத்தினால் பஸ் கட்டண உயர்வு தேவையில்லை. டீசல் மீதான மதிப்புகூட்டு வரியை ரத்து செய்ய யோசனை கூறியுள்ளோம். போக்குவரத்துத் துறையில் கமிஷன் வாங்காமல் இருந்தாலே நஷ்டம் ஏற்படாது. தி.மு.க தரப்பில் ஆய்வறிக்கையை வழங்கிய பிறகு முதல்-அமைச்சர் தரப்பில் இருந்து எந்த உறுதியும் வழங்கவில்லை.
பரிந்துரைகள் மீது நடவடிக்கை இல்லையென்றால், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுக்கப்படும்.
சட்டப்பேரவையில் எந்த அடிப்படையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டது . ஜெயலலிதா இன்று உயிரோடு இருந்திருந்தால் சசிகலாவுடன் சிறையில் இருந்திருப்பார்.குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் ஆளுநரை அழைத்தும், படத்திறப்பு விழாவில் அவர்கள் பங்கேற்காதது ஏன்? ஜனநாயகத்தை காக்கும் சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்தை வைத்ததை ஏற்க முடியாது இவ்வாறு அவர் கூறினார்.