

சென்னை,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது சாத்தியமற்றது. எனவே, 2020-21-ம் ஆண்டுக்காக மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.30,42,230 கோடியில் இருந்து மக்களின் பசி, வாழ்வாதார தேவையை பூர்த்தி செய்திட வேண்டும்.
குறிப்பாக அதிக நிதி ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு துறை, உள்துறை, ரெயில்வே துறை, மனிதவள மேம்பாட்டு துறை, ஊரக வளர்ச்சி துறைக்கான நிதியினை பயன்படுத்தலாம்.
அந்த நிதியை, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள சுமார் 30 கோடி குடும்பத்தினருக்கு 2 மாத வாழ்வாதார தேவைக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணத்தொகையும், மாதம் 20 கிலோ வீதம் 2 மாதத்துக்கு அரிசி, கோதுமை போன்றவற்றை இலவசமாகவும் மத்திய அரசு வழங்கலாம்.
கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு, மாற்று பணிகளுக்கு பதிவு செய்துள்ள முன்னாள் ராணுவத்தினர் சுமார் 4 லட்சம் பேரை பயன்படுத்த மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.