

மீனம்பாக்கம்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த மார்ச் மாதத்தில் 12 ஆயிரத்து 22 விமானங்களில் 17 லட்சத்து 31 ஆயிரத்து 770 பயணிகள் பயணம் செய்து உள்ளனர். அதில் 9,413 உள்நாட்டு விமானங்களில் 12 லட்சத்து 89 ஆயிரத்து 995 பேரும், 2,609 பன்னாட்டு விமானங்களில் 4 லட்சத்து 41 ஆயிரத்து 775 பேரும் விமானங்களில் பயணம் செய்து உள்ளனர். உள்நாட்டு பயணிகளை பொறுத்தமட்டில் சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, அந்தமான், கொச்சி, பெங்களூரு, மதுரை, கோவை உள்ளிட்ட விமானங்களிலும், பன்னாட்டு பயணிகள் இலங்கை, துபாய், அபுதாபி, சவூதி அரேபியா, கத்தார், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், பிரான்ஸ் உள்ளிட்ட விமானங்களில் அதிகமான பயணித்துள்ளனர்.
பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தப் பயணிகளின் பெரும்பாலானவர் சுற்றுலா பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொழில், வர்த்தகம், பணிகளின் நிமித்தம் செல்லும் பயணிகளும் கணிசமாக அதிகரித்துள்ளனர். சென்னையில் இருந்து பல்வேறு நாடுகள் நகரங்களுக்கு இணைப்பு விமானங்கள் அதிக அளவில் உள்ளதால் சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் வருகின்ற கோடை விடுமுறை காலத்தில் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
முன்னணியில் சென்னை விமான நிலையம்
குறிப்பாக சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பெருளவு அதிகரிக்கும் என்று தெரிகிறது. தென்னிந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் அதிக பயணிகள் மற்றும் அதிக விமானங்களுடன் சென்னை விமான நிலையம் முன்னணியில் இருக்கிறது. குறிப்பாக சுற்றுலா பயணிகள் பெருமளவு சென்னை விமான நிலையத்தை பயன்படுத்துவதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.