

சென்னை,
சென்னை சூளை பகுதியை சேர்ந்தவர் சதீஷ், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நரம்பியல் துறை டாக்டராக பணியாற்றி வருகிறார். அதே மருத்துவமனையில் இருதயவியல் துறை டாக்டராக பணியாற்றிவந்த ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த சுதாமல்லிகாவுக்கும், சதீசுக்கும் இடையே 2 வருடங்களுக்கு முன்பு காதல் மலர்ந்தது.
இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். தற்போது அவர்களுக்கு ஒரு வயதில் ஒரு மகன் இருக்கிறான். இவர்கள் சென்னை சூளை பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்தனர். சதீசும், சுதாமல்லிகாவும் ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் பட்டமேற்படிப்பு படித்துவந்தனர்.
தூக்கில் தொங்கினார்
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சுதாமல்லிகாவுக்கும், சதீசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே கோபத்தில் சதீஷ் மருத்துவமனைக்கு கிளம்பி சென்றுவிட்டார். பணியை முடித்துவிட்டு சதீஷ் இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சதீஷ் தான் வைத்திருந்த சாவியை வைத்து கதவை திறந்து வீட்டிற்குள் சென்றார்.
அப்போது அவரது மனைவி சுதாமல்லிகா படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சதீஷ் உடனே இதுகுறித்து வேப்பேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
ஆர்.டி.ஓ. விசாரணை
உடனே விரைந்துவந்த போலீசார் சுதாமல்லிகாவின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாமல்லிகா தற்கொலை செய்துகொண்டது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வீட்டின் கதவுக்கு 2 சாவிகள் உள்ளதால் சுதாமல்லிகா கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்ற சந்தேகத்தில் அந்த குடியிருப்பில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சுதாமல்லிகாவுக்கு திருமணமாகி 2 வருடங்களே ஆவதால் வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்துகிறார்.